Monday, October 17, 2011

ஆகஸ்ட் மாத ஏற்றுமதி உயர்வு, அம்ரஸ் சாப்பிடலியா அம்ரஸ், ஷாநாஸ் ஹுசைன் தெரியுமா உங்களுக்கு?, கயிறு ஏற்றுமதி, வெங்காயம் தானே?. கேள்விக்கு என்ன பதில்?, இந்த வார இணையதளம்

சென்ற வார ஏற்றுமதி உலகம்

ஆகஸ்ட் மாத ஏற்றுமதி உயர்வு
சென்ற வருடம் இதே சமயங்களை வைத்துப் பார்க்கும் போது, ஏப்ரல் முதல் இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்து கொண்டே தான் வருகிறது. ஏப்ரல் மற்றும மே மாதங்களில் 50 சதவீதத்திற்கும் மேல் இந்த உயர்வு இருந்தது. ஜுன் மாதம் 46 சதவீதமாக இருந்தது. இந்த ஜுலை மாதம், சென்ற வருட ஜுலை மாதத்தை விட 82 சதவீதம் கூடுதலாக இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் சுமார் 40 சதவீதம் கூடுதலாக இருக்கிறது. ஜுலை மாதத்தை வைத்துப் பார்க்கும் போது ஆகஸ்ட் குறைவாக இருக்கிறது. இருந்தாலும், இந்தியாவின் ஜி.டி.பி.க்கு ஏற்றுமதி சுமார் 25 சதவீதம் கைகொடுக்கிறது. இதனால் தான் உலகளவில் பாதிப்புக்கள் ஏற்படும் போது இந்தியாவின் வளர்ச்சியும் பாதிக்கப்படுமோ என்ற எண்ணம் பலருக்கு தோன்றுகிறது.
 

அம்ரஸ்  சாப்பிடலியா அம்ரஸ்
பதப்படுத்தப்பட்ட கெட்டியான மாம்பழ சாறு தான் அம்ரஸ் என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற இந்த மாம்பழச் சாறு, மாம்பழ சீசனில் அதிகம் கிடைக்கும். ஆனால், இனி இதை வருடம் முழுவதும் பிராண்டட் டெட்ரா பாக் அல்லது பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய திட்டுமிட்டுள்ளது பிரபல ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்களான வாடிலால் கம்பெனி. இது தவிர ஜெயின் இரிகேஷன், சூரத்தை சேர்ந்த விமல் அக்ரோ சர்வீசஸ்  ஆகிய கம்பெனிகளும் இந்த சந்தையில் நுழைய உள்ளன. வாடிலால் “கார்டன் பிரஷ்” என்ற பெயரிலும், ஜெயின் இரிகேஷன் “பார்ம் பிரஷ்” என்ற பெயரிலும், விமல் அக்ரோ “சுவாத்” என்ற பெயரிலும் மார்க்கெட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளன. மாம்பழம் விற்க விரும்பும் கிருஷ்ணகிரிக்காரர்கள் இவர்களை அணுகலாமே? இல்லை அவர்களே ஒரு பிராண்ட்டின் பெயரில் தயாரித்து மார்க்கெட்டிங் செய்யலாமே? வாருங்கள் ஏற்றுமதி செய்வோம்.


ஷாநாஸ்  ஹுசைன் தெரியுமா உங்களுக்கு?
ஷாநாஸ்  ஹுசைன் இந்தியாவின் மிகப்பெரிய தொடர் பியூட்டி பார்லர்களின் உரிமையாளர் ஆவார். இவர் ஷாநாஸ்  ஹெர்பல்ஸ்  என்ற பெயரில் ஆயுர்வேத அழகு சாதன பொருட்களை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார். இது தவிர இவரின் தயாரிப்புக்கள் உள்நாட்டிலும் சக்கை போடு போடுகின்றன. இவரின் பிராண்டின் தற்போதைய மதிப்பு சுமார் 450 கோடி ரூபாய்களாகும். ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்ய நினைப்பவர்கள் இவர்களையோ அல்லது டாபர், சாரக், சென்னையை சேர்ந்த முருகப்பா குரூப்ஸ், ஹிமாலயா ட்ரக்ஸ்  போன்ற நிறுவனங்களை தொடர்பு கொண்டால் அவர்கள் உங்களுடைய ஆயுர்வேத மூலிகைகள் போன்றவை தரமானவையாக இருந்தால் வாங்கும் வாய்ப்புக்கள் உண்டு.


கயிறு ஏற்றுமதி

கயிறு மற்றும் கயிறு சம்பந்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி இந்தியாவில் பெண்களின் மேம்பாட்டுக்கு வழி வகுக்கிறது. ஏனெனில் இந்தத் தொழிலில் அதிகம் ஈடுபட்டிருப்பவர்கள் பெண்கள் தாம். இதன் மூலம் செய்யப்படும் பொருட்கள் சுற்றுபுற சுழல் கெடாமல் இருக்கவும் உதவுகிறது. 12வது திட்ட காலத்தில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு இது சம்பந்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

வெங்காயம் தானே?

வெங்காயம் தானே என்று அரசாங்கம் சும்மா இருக்காமல் மறுபடி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. ஏன்? வெங்காய விலைகள் தாறுமாறாக ஏறி வருகின்றன. ஒவ்வொரு முறை வெங்காயம் விலை ஏறும் போது அரசாங்கத்தின் நாடித்துடிப்பும் ஏறிவருகிறது. ஆதலால் வேறு வழியில்லாமல் ஏற்றுமதியை தடை செய்து விடுகிறார்கள். ஏற்றுமதிக்கு ஆர்டர் வாங்கி வைத்திருந்தவர்கள் பாடும் சிறிது திண்டாட்டம் தான். வெங்காயம் போன்ற பொருட்களுக்கு ஏற்றுமதி காண்டிராக்ட் போடும் போதே அரசாங்கத்தின் மூலம் தடைகள் வருமானால் அதனால் இந்த காண்டிராக்ட் கேன்சல் செய்யப்படுமானால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று போட்டுக் கொள்வது நல்லது. அது உங்களுக்கு பிரச்சனைகளை குறைக்க உதவும்.


கேள்விக்கு என்ன பதில்?
ராமராஜ்
கரூர்

கேள்வி:
ஆண்டி டம்பிங் டுயூட்டி என்றால் என்ன?
பதில்
ஒரு நாட்டுக்கு தேவையில்லாத பொருட்களை அந்த நாட்டுக்குள் கொண்டு வந்து கொட்டி அதனால் அந்த பொருளின் உள்நாட்டு விலையை குறைப்பார்களேயானால், அப்படி உள்ளே நுழையும் பொருட்களுக்கு ஆண்டி டம்பிங் டுயூட்டி விதிக்கப்படும். இது அந்த பொருளின் வாங்கும் விலையை கூட்டுவதனால், அந்தப் பொருளை இறக்குமதி செய்ய மாட்டார்கள்.

இந்த வார இணையதளம்http://www.bidline.com/

உலகம் முழுவதும் அரசாங்கங்கள் தினசரி தங்கள் தேவைகளுக்கு பொருட்களை வாங்கிக்கொண்டு இருக்கின்றன. அவையெல்லாம் தற்போது ஈடெண்டர் என்ற முறைப்படியே கொடுக்கப்படுகின்றன. உலகத்தில் வெளியிடப்பெறும் டெண்டர்களையெல்லாம் ஒருங்கிணைத்து அவற்றை ஒரு இணையதளம் மூலமாக அளிக்கிறார்கள். கட்டண இணையதளமாக இருந்தாலும், சிறிய மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களுக்கும் ஏற்ற வகையில் திட்டங்கள் உள்ளது. பலர் சேர்ந்து இதன் மூலம் காண்டிராக்ட்கள் பெறுவார்களேயானால் அது மிகவும் பயனளிக்கும்.

தங்களின் கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com

No comments:

Post a Comment