Monday, October 10, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் - 13

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


கூடிவரும் ஏற்றுமதி
சென்ற வருடம் ஜுலை மாதத்தை விட இந்த ஜுலையில் ஏற்றுமதி சுமார் 82 சதவீதம் கூடியிருக்கிறது. குறிப்பாக பார்த்தால் இந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஏற்றுமதி கூடிக்கொண்டே தான் இருக்கிறது. ஏப்ரல், மே, ஜுன் மாத ஏற்றுமதி அளவை வைத்துப் பார்த்தால் அது இந்திய ஜி.டி.பி.யில் 25 சதவீதம் இருக்கிறது.


வெற்றிலை ஏற்றுமதி
இந்தியா உலகளவில் 20 நாடுகளுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்து வருகிறது. பாகிஸதான், ஔமன், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ, கென்யா, ஹாங்காங், சவுதி, குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகள் இதில் அடங்கும். 2010ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை  1656 டன்கள் வெற்றிலை ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்தியாவில் சுமார் 50000 ஹெக்டேர் அளவில் வெற்றிலை பயிரிடப்படுகிறது. மேற்கு வங்களாத்தில் இருந்து தான் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து கர்நாடகா வருகிறது. கும்பகோணம் என்றதும் டிகிரி காப்பியும், வெற்றிலையும் தான் ஞாபகம் வருகிறது. ஏற்றுமதி செய்பவர்கள் இருந்தால் உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.


ஏற்றுமதியில் டாக்குமெண்டேஷன்
ஏற்றுமதியில் டாக்குமெண்டேஷன் தான் மிகவும் கஷ்டமானது. அதாவது, பொருளை தயாரிப்பதற்கு நீங்கள் எவ்வளவு கவனம் கொடுக்கிறீர்களோ அவ்வளவு கவனம் எல்.சி. மூலம் செய்யப்படும் ஏற்றுமதி டாக்குமெண்டேஷனுக்கும் கொடுக்க வேண்டும். நீங்கள் ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் உங்கள் டாக்குமெண்டேஷன் கவலையை விட்டுவிடுங்கள். உங்களுக்காக இந்த பகுதி உதவக் காத்திருக்கிறது. ஏற்றுமதி டாக்குமெண்டேஷனில் உலகளவில் அனுபவம் வாய்ந்த சேதுராமன் சாத்தப்பன் உங்களுடைய டாக்குமெண்டேஷன்களை சரிபார்த்து தருவார்.

அரிசி ஏற்றுமதி
அரசாங்கம் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு தடைகள் ஏதும் விதிக்கவில்லை. அதே சமயம் பாசுமதி அல்லாத அரிசிக்கு ஏற்றுமதிக்கு முன்பு தடை இருந்தது. தற்போது கட்டுபாடுகள் உள்ளது. அதாவது பொன்னி அரிசி தலா 50000 டன்கள் விசாகப்பட்டினம், சென்னை துறைமுகங்கள் மூலமாகவும், தலா 25000 டன்கள் தூத்துக்குடி, கொச்சின் துறைமுகங்கள் மூலமாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர முன்பு 20,25 கிலோ பாக்கிங் கூட ஏற்றுமதி செய்ய அனுமதி இருந்தது. தற்போது அது 10 கிலோ அல்லது அதற்கு கீழே உள்ள பாக்கிங்களில் தான் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்ற கட்டுபாடு இருப்பதால் அது ஏற்றுமதி விலையை வேறு கூட்டி விடுகிறது. இதனால் மற்ற நாடுகளுடன் விலையில் போட்டி போட இயலாமல் போய்விடுகிறது. இதை அரசாங்கத்திடம் எடுத்து சென்றுள்ளார்கள் தென்னிந்திய அரிசி உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள். தற்போது அரிசி உற்பத்தியில் தன்னிறைவு இருப்பதால் அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்துகிறதா என்று பார்ப்போம்.

லெதர் ஏற்றுமதி
இந்தியா கிட்டதட்ட 18 நாடுகளுக்கு லெதர் மற்றும் லெதர் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் அதிகமாக ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் செல்கிறது. உலகளவில் லெதர் பொருட்கள் தயாரிப்பில் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடம் சீனாவிற்கு தான். இந்தியாவில் லெதர் உற்பத்தியில் சென்னை, வேலூர் மாவட்டம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. மும்பை வந்து பாருங்கள். தாரவியில் உள்ள லெதர் பொருட்கள் கடைகளில் பெரும்பாலும் தமிழர்களே வைத்துள்ளார்கள்.


பங்களாதேஷ் வழியாக இந்திய ஏற்றுமதி
இந்திய அப்பாரல் ஏற்றுமதியாளர்கள் துணிகளை பங்களாதேஷ்க்கு ஏற்றுமதி செய்து அங்கு ஆயத்த ஆடைகளை தயார் செய்து அங்கிருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்கள். இது ஏன் என்றால் அங்கு லேபர் மலிவாக கிடைப்பதால் தான். இங்குள்ளவர்கள் கடினமாக உழைக்க ரெடியாக இருந்தால் இங்கேயே செய்யலாமே? தொழிலாளி, முதலாளி என்று இருவரும் யோசிக்க வேண்டிய நேரம் இது.


கேள்விக்கு என்ன பதில்?
அரசன்
திருத்துறைப்பூண்டி

கேள்வி: ஏற்றுமதி செய்ய பான் நம்பர் தேவையா? பான் நம்பர் இருந்தால் வருமான வரி கட்ட வேண்டுமா?
பதில்: பலரும் கேட்கும் கேள்வி இது. ஏற்றுமதி செய்ய பான் நம்பர் தேவையில்லை என்றாலும், ஐ.ஈ.சி. கோடு நம்பர் வாங்குவதற்கு கட்டாயம் பான் நம்பர் தேவை. பான் நம்பர் இருந்தால் வருமான வரி கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வருமான வரி கட்டும் அளவு வருமானம் இருந்தால் கட்டாயம் வருமான வரி கட்ட வேண்டும். அந்த அளவைத் தாண்டாவிட்டாலும் பான் நம்பர் இருப்பதனால் வருமான வரி கட்ட வேண்டும் என்ற எண்ணம் தவறானது.

உங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய முகவரி sethuraman.sathappan@gmail.com

No comments:

Post a Comment